google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: நடிகர்களே! நீங்கள் திரையில் மட்டும் நடியுங்கள்!

Thursday, April 7, 2016

நடிகர்களே! நீங்கள் திரையில் மட்டும் நடியுங்கள்!



 தமிழ் சினிமா கலைஞர்களே! மன்னிக்கவும் நடிகர்களே!
 “உனக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...? -  இந்த நகைச்சுவை வசனம் மிகச் சரியாக நடிகர் சங்கத்துக்கு பொருந்துகிறது. ஆம். சாமானியனின் வாழ்வாதார பிரச்னைகளை துச்சமாக மதித்த, மதிக்கின்ற நடிகர்கள், அவர்களுக்கு பிரச்னை என்றால் கொந்தளிக்கிறார்கள்.

கலைஞனுக்கு அரசியல் வேண்டாமா...?

இங்கு அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை

ஆனால், நீங்கள் இது எதையும் கணக்கில் கொள்ளாமல், “காவிரி பிரச்னை உள்ளிட்ட விஷயங்களில் அரசாங்கம்தான் செயல்பட வேண்டும். அரசியல் விவகாரங்களில் கண்டிப்பாக நாங்கள் பங்கேற்க மாட்டோம்...” என்கிறீர்கள்.

அதாவது, திரை கலைஞனுக்கும், சாமானியனுக்கும் உள்ள தொடர்பு அந்த மூன்று மணி நேர சினிமா என்பது மட்டும்தான் என்பது உங்கள் வாதம்.

 பின் இப்போது ஏன் நட்சத்திர கிரிக்கெட் விளையாடி, டிக்கெட் விற்பனை, விளம்பர வருமானம் என மக்கள் பணத்தில் நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்...?

உங்கள் அடிப்படை தேவைக்காகக் கூட ஒரு சாமானியனின் பாக்கெட்டில்தான் கை விடுவீர்கள் என்பது எவ்வகை நியாயம்.

 .மழை வெள்ளத்தின் போது மக்களுக்காக உங்கள் கரம் நீண்டது உண்மைதான்.

தஞ்சை விவசாயி பாலனுக்கு விஷால் உட்பட உங்களில் சிலர் பண உதவி செய்தீர்கள். மகிழ்ச்சிதான்.

 .விவசாயி பாலன்களின் சிறு கடனுக்கு பின்னாலும், விஜய் மல்லையாக்களின் பெரும் வாரா கடன்களுக்குப் பின்னாலும், ஒரு மிகப் பெரிய அரசியல் இருக்கிறது.

 நீங்கள் அதைக் கண்டித்து அழுத்தமான கருத்துக்களைத் தெரிவித்து இருந்தீர்களானால், நீங்கள் நிச்சயம் நிஜ கதாநாயகனாக உயர்ந்து இருப்பீர்கள்.

ஆனால்,

நீர் வளத்தைச் சுரண்டும் குளிர்பான விளம்பரங்களில் நடித்துக் கொண்டே, பாலனுக்காக  கண்ணீர் வடிப்பதை எந்த கணக்கில் சேர்ப்பது?

சாமானிய ரசிகனை நம்ப வைத்தீர்கள். நீங்கள் ரசிக மன்றங்களை ஊக்குவித்தீர்கள். உங்கள் திரைப்பட விளம்பர பதாகைகளில் பால் அபிஷேகம் செய்யும் போது ரசித்தீர்கள்.

சொல்லப்போனால் அந்த சாமானிய வெள்ளந்தி ரசிகன், உங்கள் ஒவ்வொரு பிரச்னையிலும் துணை நின்றிருக்கிறான். உங்களைத் தவறாக பேசியவர்களைக் கொலை கூட செய்திருக்கிறான்.

இதையெல்லாம் தடுத்து, உங்கள் ரசிக மன்றங்களை கலைத்து, நான் வெறும் சினிமா கலைஞன் மட்டும்தான், ’எனக்கு வேறு எந்த சமூக பிரக்ஞையும் இல்லை’ என்று சொல்லி இருப்பீர்களாயின், அவன் உங்களிடம் எதையும் எதிர்பார்க்கப் போவதில்லை.

ஆனால்,

 நீங்கள் அதையெல்லாம் செய்யாமல், மீண்டும் உங்களுக்கொரு பிரச்னை என்றவுடன், அவனைப் பயன்படுத்திக் கொள்ள, அல்லது அவனை மேலும் சுரண்ட நினைப்பது நியாயமா ?

அண்டை மாநிலங்களிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்:


அண்டை மாநிலங்களில், எந்த சமூகப் பிரச்னை என்றாலும், அங்கு முதலில் ஒலிப்பது கலைஞர்களின் குரலாகத்தான் இருக்கும்.  அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்கிறார்கள்.

  ஒரு நிகழ்வில்   இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த அமைச்சர் குத்து விளக்கு ஏற்றுவது தம் மதத்துக்கு எதிரானது என்று மறுக்கிறார். ஆனால், அதை அந்த மேடையிலேயே நடிகர் மம்முட்டி கண்டிக்கிறார். அவர் அட்டைக்கத்தியாக இருப்பதில்லை.

ஆனால்,

 நீங்கள் உங்களை நீங்களே தேவ தூதர்களாக கருதி, மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டீர்கள். அதனால்தான் சென்னையில் நடந்த ஹிதேந்திரன் கதையை டிராஃபிக்காவும், மதுரை நாராயண கிருஷ்ணன் கதையை உஸ்தாத் ஓட்டாலாகவும் மலையாள கலைஞர்கள் முந்திக் கொண்டு எடுக்கிறார்கள்.

திருட்டி டிவிடிகளுக்கு எதிராகப் பொங்கும் கலைஞர்களே... உங்களின் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இங்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்ட பின்பும், சினிமா டிக்கெட் விலை குறையாமல் இருக்கிறதே, அதற்காக எப்போது பொங்கப் போகிறீர்கள்...?

கேளிக்கை வரி ரத்து செய்யப்படாத பாபநாசம் படத்திற்கும் 120 ரூபாய் டிக்கெட் தான், கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்ட காக்கா முட்டைக்கும் அதே 120 தான்.


 படப்பிடிப்புக்குச் செல்லும் இடமெல்லாம், திருட்டு டிவிடிக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கும் விஷால் அவர்களுக்கு, சென்னை திரையரங்கங்கள் அடிக்கும் கொள்ளை பற்றி தெரியாதா...?-

முதலில் கொஞ்சம் இறங்கி வாருங்கள். மக்களோடு மக்களாக இருங்கள். அவர்களின் பிர்ச்னைகளை புரிந்து கொள்ளுங்கள்.  மக்களுக்கு நடக்கும் அநீதிகளை எந்த சமரசமும் இல்லாமல் பேசுங்கள்.

 நீங்கள் கஷ்டப்பட்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்று இல்லை. மக்கள் நீங்கள் கேட்காமலேயே பணத்தை வாரிக் கொடுப்பார்கள்.



-விகடனில்  மு. நியாஸ் அகமதுவின் கட்டுரையிலிருந்து.....நன்றி 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1