google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: எங்கே அந்த வாதுமை மரம்...?

Monday, January 20, 2014

எங்கே அந்த வாதுமை மரம்...?



இது கதையோ...சிறு கதையோ....அல்லது தொடர் கதையின் அஸ்திவாரமோ அல்ல இங்கே இலக்கியத் தரம் எதுவுமில்லை உங்கள் விருதுகளும் பட்டையங்களும் பதக்கங்களும் எதுவும் எனக்கு வேண்டாம் சும்மா ஒரு நினைவலை
























எங்க கிராமத்தில் நடு மையமாக இருக்கும் பிள்ளயார் கோயில்...அங்கே பூஜையின் போது கொஞ்சநேரம்  மட்டும் மணியடித்தால் யாரும் கண்டுக்கொள்வதில்லை 

வயதான பிள்ளயார் கோயில் பூஜாரி வெந்தும் வேகாமலும் பச்சரிசி பொங்கலிட்டு கடமைக்குப் பிள்ளையாருக்கு படைத்து விட்டு  சாமி கும்பிட வந்த இரண்டு மூன்று பெரியோர்களுக்குக் கொஞ்சம் கொடுத்துவிட்டு மீதியை கோயில் சுற்று சுவர் திண்டில் காக்கைகளுக்கு வைத்து விட்டு போய்விடுவார்...

ஆனால்...

பிள்ளையார் கோயில் மணியும் பியிந்த பழைய கொட்டு முரசும் விடாது நீண்ட நேரம் அடித்தால் அப்போது கோயிலில் யாரோ சர்க்கரைப் பொங்கல் படைக்கின்றார்கள் என்று அர்த்தம்

கோயிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் ஓடுகள் மேய்ந்த ஐந்து வகுப்புகள் வரையே உள்ள எங்க பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும் என்னைப் போன்ற சிறுவர்கள் எல்லோருக்கும் இருப்பு கொள்ளாது 

பொதுவாக என்றாவது ஒருநாள் மதியம் 12 மணி பூஜையில்தான் இப்படி நீண்ட நேரம் மணியும் முரசும் அடிக்கும் எங்கள் திரு திரு முழியை பார்த்தே வாத்தியார்கள் எங்களைப் பிரசாதம் வாங்கித் தின்ன அனுப்பிவிடுவார்கள்....

அப்படியே யாராவது ஒரு பையனிடம் கையில் ஒரு சிறு பாத்திரத்தையும் கொடுத்துப் பூஜாரியிடம் வாத்தியாருக்குனு சொல்லுடா என்றும்.....

நாங்கள் ஒரே ஓட்டமாகக் கோயிலை அடைந்ததும் முதலில் செல்வது அதன் அருகில் இருக்கும் வாதுமை மரத்தை நோக்கித்தான் சூடான சக்கரை பொங்கல் உள்ளங்கையில் வாங்கினால் கை சுடும் என்பதால் வாதுமை மரத்தின் இலையில் வாங்குவோம் அந்த வாதுமை மரம மிகவும் உயரமாக வளர்ந்து  இருப்பதால் கல் எடுத்து எறிவோம் விழும் இலைகளை எல்லோரும் பொறுக்கிக் கொண்டு கோயில் உள்ளே வரிசையில் அமர்வோம்

அந்த வாதுமை மரத்துக்கு ஒரு வரலாறு உண்டு.....எங்க தாத்தா சொல்லுவார்...அவர் சிறுவனாக இருந்த போதே அந்த வாதுமை மரமும் இப்படிப் பெரிய மரமாக இருந்ததாம் அவரும் அவரை ஒத்த வயதுடைய சிறுவர்களும் அவ்வப்போது   இதுபோல்தான் மரத்தை மொட்டை அடித்தார்களாம்......

ஆனாலும்  அந்த வாதுமை மரம் எங்களுக்கு இலைகளைத் தானம் தரத் தவறுவதில்லை எப்போதாவது அது காய்க்கும் போது அது பழுக்கும் வரைகூட நாங்கள் விடுவதில்லை கல்லெடுத்து எரிந்து விழும் காய்களைப் பொருக்கி பெரிய கல் மீது வைத்து அதன் உள்ளிருக்கும் கொஞ்சம் கடினமான ஓட்டை உடைத்தால் ஒரு சிறு பருப்பு நைய்ந்துப் போய் கிடைக்கும்...அப்படியே அதைச் சுவைத்துவிட்டு ஆனந்தப் படுவோம் 

சமீபத்தில்  ஊருக்குப் போயிருந்த போது அந்த வாதுமை மரத்தை பார்க்க வேண்டும் என்று பிள்ளையார் கோயிலுக்குப் போனேன் சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தேன் அப்படியொரு மரம் அங்கே இருந்ததற்கான அறிகுறியே இல்லை யாரிடமும் எங்கே அந்த வாதுமை மரம்...? என்றும் கேட்கத் தோணவில்லை


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1