புத்தகக் கண்காட்சியும் மூடர்கூடமும் என்ற என் பதிவுக்கு ஏக வசனத்தில் கருத்துயிட்டு மகிழ்ந்து போனவர்களுக்காக இப்பதிவு....புத்தகங்களுக்கு நான் எதிரியுமல்ல புத்தகங்களை நேசிப்பவர்கள் என் எதிரிகளுமல்ல பிறகு ஏன் இப்படி எழுதினேன்...?
சென்னைக்கு (1983) வந்த புதிதில் மூன்று ஆண்டுகளாக என் வாழ்க்கை விடிவதும் துயில்வதும் எக்மோரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில்தான்...அப்படி புத்தகங்களோடு வாழ்ந்ததில் எனக்கு வந்தது இப்படி எழுதும் அறிவும்தான்
அப்போது கணையாழி என்ற கலை கலைக்காகவே இருந்த பத்திரிகையிலும் சில எழுதினேன் தீபம் என்ற கலை மக்களுக்காகவே என்ற பத்திரிகையிலும் சில எழுதினேன் இப்படி எழுதுவதில்கூட நாம் சுயமாகச் சிந்தித்தவைகளை எழுத முடிவதில்லை அன்றும் அப்படித்தான் இன்றும் அப்படித்தான் இதை யாரும் மறுப்பவர்கள் உண்டா...?
ஒருநாள் தீபம் பத்திரிகையிலிருந்து ஒரு கடிதம் வந்தது அதன் ஆசிரியர் அய்யா தீபம் நா.பார்த்தசாரதியை சந்திக்கும் படி......
சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகே ஒரு பழைய பாழடைந்த கட்டிடத்தில் இருந்த தீபம் பத்திரிக்கை அலுவலகத்தில் அவரைச் சந்தித்தேன் ஒரு சிறு அறையில் வெளிச்சம் குறைவான அறையில் அமர்த்திருந்த அவர் அன்புடன் என்னை அருகில் அமரச் செய்து....என்னையே பார்த்துக்கொண்டிர்ந்தார் பிறகு என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து...நான் ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு படித்தவன் என்பதையும் எங்கோ ஒரு சிற்றூரில் பிறந்து பிழைப்புக்காக வேலை தேடி சென்னை வந்திருப்பதையும் அறிந்து கொண்டு.....
நான் எழுதிய பட்டம் என்ற கவிதையின் தாக்கமே என்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலை அந்தப் பெருந்தகைக்கு உருவாக்கியுள்ளது
====பட்டம்=====
பிச்சை எடுக்கிறது
பி.ஏ....பட்டம்
அதைப்
பிடுங்கித் தின்கிறது
எம்.ஏ.....பட்டம்
இவர்களை
ஏளனமாய்
ஏ.சி.காரிலிருந்து
எட்டிப் பார்க்கின்றது
எம்.எல்.ஏ......பட்டம்
அன்றைய வேலையில்லா நிலையைப் படித்தவர்களுக்கு நிகழ்ந்த அவலமான காலக்கட்டத்தைச் சித்திரமாக வடித்த இக்கவிதைக்கு நிறையக் கருத்துக்களும் கடிதங்களும் வந்தமையாலையே அவர் என்னை சந்திக்க வரும்படி அழைத்துள்ளார்
இன்னும் எத்தனை காலம்தான் உங்கள் பெற்றோருக்குச் சுமையாக இருப்பீர்கள் உடனடியாக ஏதேனும் ஒரு வேலை தேடுங்கள்...படித்த படிப்புக்கு உரிய வேலை வரும் வரை காத்திருக்காதீர்கள் உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டு எழுதுங்கள்...நீங்கள் எழுதுவது உங்கள் ஆத்ம திருப்திக்காக இருக்கட்டும் அப்போதுதான் அதைப் படிப்பவர்களுக்கும் அதுவும் ஆத்ம திருப்தி தரும்.....எதை எழுதினாலும் இந்தச் சமூகத்துக்காக எழுதுங்கள்
அய்யா தீபம் பார்த்தசாரதி அவர்கள் அன்று சொன்னது அந்தப் பார்த்தசாரதி கீதையில் சொன்ன அறிவுரையாக எனக்குப்பட்டது
அப்படியே நானும் அன்றைய காலகட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி. (பாஸ்/பெயில்) படித்தவர்கள் வேலைக்குத் தேவை என்ற விளம்பரம் பார்த்து நானும் எனது படிப்பை மறைத்து பொய் சொல்லி ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்......என் உழைப்பு என்னை லண்டன்-பாரிஸ் நகரங்கள் வரை அழைத்துச் சென்றுள்ளது
இன்று என்னால் எத்தனை புத்தகங்கள் வேண்டுமாயினும் போடமுடியும் எந்தனை பதிப்பகங்கள் வேண்டுமானாலும் என்னால் தொடங்க முடியும் ஆனால் என்னால் படிப்பவரையும் எழுதுவரையும் யாரையும் ஏமாற்ற முடியாது......போலியாக வாழமுடியாது
இன்றுவரை விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கின்றேன் இப்போது முப்பது வருடங்களுக்குப் பிறகு அவ்வப்போது இப்படி எழுதிக்கொண்டிருக்கின்றேன்
நானும் நிறையப் புத்தக கண்காட்சிகள் சென்று புத்தகங்கள் வாங்கியுள்ளேன் எந்த ஊருக்குப் போனாலும் இன்றுவரை அங்கே உள்ள புத்தக கடைகளில் என்னால் சுமக்க முடிந்த அளவு புத்தகங்களை வாங்கி வருவேன் படித்தவைகளில் எனக்குப் பிடித்தவைகளை என்னை சந்திக்கும் சில எழுத்து நண்பர்களைப் பார்க்கும் போது அவர்களுக்கு இலவசமாகக் கொடுத்துவிடுவேன்
சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சையப்பன் கல்லுரி எதிரில் உள்ள திடலில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு குடும்பத்துடன் சென்று.........ஒரு புத்தகமும் வாங்கவில்லை அங்கே கண்ட காட்சிகள் எனக்கு ஒப்புமையில்லை.... எழுத்தும் தொழிலானதே!
இன்று நிறைய எழுத்தாளர்களுக்கும் சினிமாவியாதி பிடித்துள்ளது அவர்களின் எழுத்துக்களில் ஒரு மசாலா சினிமாத்தனங்கள் ஒளிந்துக்கொண்டு கண்சிமிட்டுகின்றது...வாசிப்பவர்களும் சினிமா விசிறிகள் போன்று "நான் இந்த எழுத்தாளரின் ரசிகன்" என்பதில் பெருமை கொள்கின்றனர்
(இன்னும் நிறைய எழுதத் தோன்றுகின்றது........இதயம் பேசுகின்றது மணியன் அய்யா அவர்களைச் சந்தித்தது........எழுத்தாளர் புஷ்பா தங்கத்துரை அவர்களுடன் உரையாடியது......பெரும் தொழில் அதிபர்கள் பெரும் போலி எழுத்தாளர்களாகப் பவனிவருவதை அருகிலிருந்தே பார்வையிட்டு.... இப்படி நிறைய எழுதத் தோன்றுகிறது இன்னொரு பதிவில் சிந்திப்போம்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |