google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கோபுரத்தின் உச்சியிலே....

Saturday, December 14, 2013

கோபுரத்தின் உச்சியிலே....

நான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தின் மீது ஏறி அதன் கலசங்களைத் தொட்டு சுற்றி வந்துள்ளேன் என்றால்.......
யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள் நம்பவில்லை என்றால் கூடப் பரவாயில்லை எல்லோரும் என்னை மறை கழண்ட கேஸ் என்பது போல் பார்க்கிறார்கள்  


Made with .freeonlinephotoeditor.com
அதிலும் என் மனைவியிடம் நிறையத் தடவை திருமணம் ஆன புதிதில் சொல்லி....அவள் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்வதில்லை அப்புறம் ரொம்ப வருடங்களுக்கு யாரிடமும் சொல்வதில்லை சமீபத்தில் என் 19 வயது மகனிடம்  நான் என் வீரச் செயலை சொன்னபோது அவனும்........
"அம்மா...அப்பா புதுசா கத உடுது...." என்ற போது  மறுபடியும் என் மூக்கு உடைந்ததுதான் மிச்சம் சரி....நீங்களாவது நம்புவீங்களா....?

அப்போது எனது வயது 19......1977-ஆம் வருடம்    நான் மதுரை அருகில் உள்ள நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி B.A. படித்துக்கொண்டிருந்தேன் விடுதி நண்பர்களுடன்   ஞாயிறு தோறும் மதியத்திற்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு காசு இருந்தால் ஏதாவது சினிமா பார்த்துவிட்டு விடுதிக்கு இரவு சென்றுவிடுவது வழக்கம்

அப்படியொரு நாள் நானும் எனது நண்பர்கள் ஆக 5 பேர் மீனாட்சி அம்மன் கோயிலில் சுற்றி திரிந்து தெற்கு  வாசல் கோபுரம் அருகில் வரும் போது எங்களுக்குள் ஒரு போட்டி........யார் கோபுரத்தின் உச்சிக்கு செல்வது என்று...?

அப்போதெல்லாம் கோபுரம் உள்ளே செல்லும் வழி திறந்தே இருக்கும் உடன் ஐவரும் உள்ளே சென்றோம்.........முதலில் மாடிப்படிகள் போன்று எளிதாக இருந்தது விறுவிறு என்று ஏறி உச்சியை அடைந்தோம் போகும் வழியெங்கும் வௌவால் ஆய் நாற்றம் அங்கே இங்கே சில வவ்வால்கள் பறந்து திரிந்தன நல்ல வெளிச்சமும் இருந்தது 

கோபுரத்தின் உச்சியில்  கடைசிப் பகுதிக்கு மேல் செல்ல வழியில்லை இன்னும் கோபுரத்தின் வெளியே உச்சிக்கு செல்ல வேண்டுமெனில் கோபுரத்தின் சிதைகள் மீது ஏறி கோபுர விளிம்புகளைப் பிடித்துத்தான் ஏறவேண்டும் நானும் இன்னொரு நண்பனும் கோபுர உச்சிக்கு சென்று அதன் கலசங்களைத் தொட ஆசை பட்டபோது  மற்ற மூன்று நண்பர்களும் முடியாதென்று கீழே இறங்க முற்பட்டார்கள்

அங்கே பயப்படும் படியாக எதுவும் இல்லை அகலமான சிதைகள் அவைகள் அழகான படிக்கட்டுகள் போன்று நீட்டிக்கொண்டிருந்தன நாங்கள் இருவரும் அதன் மீது ஏறி கோபுர விளிம்புகளைப் பிடித்துக் கலசம் இருக்கும் பகுதிக்கு போனோம் அங்கே காற்று அதிகமாக வீசுகின்றது தவிர மேலிருந்து கீழே பார்க்க முடியாது அவ்வளவு அகலமான பரப்பு அதன் மீது உயரமான திண்டு அதன் மீது கோபுர கலசங்கள் கைகளால் ஆவிகட்டி பிடிக்க முடியவில்லை ஆனால் அதனைப் பற்றிக்கொண்டு மெதுவாக நகர்ந்து...நகர்ந்து அந்த கோபுரக்கலசங்களைச்   சுற்றி வந்தோம்....

கைகளை விடுத்து பிடிமானமின்றி நிற்கவோ உட்காரவோ முடியாது அதனால் உடன் மீண்டும் ஏறி வந்த நுழைவாயில் உள்ளே எளிதாகச் சிதைகளைப் பிடித்து இறங்கி விட்டோம்

அப்போதெல்லாம் இது பெரிய விசயமாக எனக்குத் தெரியவில்லை 
சமீபத்தில் சில நாட்கள் முன்பு நான் மதுரைக்குச் சென்றிருந்த போது  கோயிலுக்குப் போக ஆசைப்பட்டேன் டவுன்ஹால் ரோட்டில் சில ஷாப்பிங் முடித்துவிட்டு அப்படியே மேற்கு வாசல் அருகில் வந்தேன் என் மொபைலில் கோபுரத்தை ஒரு போட்டா எடுத்து விட்டு அப்படியே தெற்கு வாசல் வந்தேன் அங்கே நிறையப் போலிஸ் காவல் அந்தக் கோபுரத்தையும் போட்டோ எடுத்துவிட்டு கொஞ்ச நேரம் நாங்கள் ஏறி விளையாண்ட கோபுரத்தை பார்த்துக்கொண்டு நின்றேன் அருகில் இருந்த காவலர்கள் ஏதேனும் நினைத்துக் கொள்வார்களோ என்று நினைத்து ஒரு ஜூஸ் கடையில் ஜிகர்தண்டா வாங்கிக் குடித்துவிட்டு நகர்ந்தேன் ரொம்பத் தூரம் நடந்து விட்டேனோ...? கால் வலித்தது பழசை நினைத்தேன் வலி போயே போச்சு...

இப்போது நினைத்தாலும் இந்த சம்பவம்  எனக்கு பிரமிப்பாக தெரிகின்றது இளம் வயது பயமறியாது என்பது உண்மைதான் இந்த என் திகில் அனுபவத்தை நீங்களாவது நம்புவீங்களா...?

Made with .freeonlinephotoeditor.com

(இப்போது இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால்.........இன்று ஒரு செய்தி படித்தேன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தில் அதன் கலசங்களில் மின்னல் தாக்கிய செய்தி.........என்னுள்ளும் இதை எழுதத்தூண்டியது)
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1