ஊனத்தின்
உயரம் தாண்டி
ஜெயித்தது....
நீ மட்டுமல்ல மாரியப்பா!
ஊனம் என்று முடங்காத
உன் முயற்சிதான்!
வறுமையில் வாடிவிடாத
உன் தன்னம்பிக்கைதான்!
விபத்தில்
உன் காலை
ஊனமாக்கியது விதி
ஆனால்
நீயோ
அந்த விதியையே
ஊனமாக்கி
உயரம் தாண்டியவன்!
வறுமை
உன்னை காயப்படுத்த
வந்தபோது....
நீயோ
விடா முயற்சியால்
வறுமைக்கு
காயத்தை தந்தவன்!
கோடியை வென்றவன்
நாலு பிள்ளை பெற்றபின்
உன் தந்தையோ ஓடிவிட்டார்
ஆனாலும்
காய்கறி விற்று
தன்னம்பிக்கை வாங்கி
வளர்த்து விட்டாள்
உன் அன்னை!
அவளுக்கு நன்றி சொல்ல
நீயோ வாங்கி வந்தாய் தங்கம்!
யாரும் பாரா ஒலிம்பிக்கை
உலகமே பார்க்க வைத்தாய்
பெயரில் மட்டும் அல்ல
பெரிய வடகம்பட்டி
உன்னைப் பெற்றதால்
உண்மையில்
அது பெரிய வடகம்பட்டி தான்
உலகுக்கு உன்னால்
இந்தியன் என்று பெருமை!
இந்தியாவுக்கு உன்னால்
தமிழன் என்று பெருமை!
உலக அரங்கில்
இந்தியக் கொடியை
உயர்த்திப் பிடித்த தமிழன்!
இனி
தமிழன் என்று சொல்வேன்
உன்னால்
தலை நிமிர்ந்து சொல்வேன்
உயரம் தாண்டி
ஜெயித்தது....
நீ மட்டுமல்ல மாரியப்பா!
உன்னோடு
என் தமிழினமும் தான்!!
----பரிதி.முத்துராசன்
ஜெயித்தது....
நீ மட்டுமல்ல மாரியப்பா!
உன்னோடு
என் தமிழினமும் தான்!!
----பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |